உடலுறுப்பு தானத் திட்டத்தில் 100 பேர் மூலம் 300 பேர் பயன்: தமிழகம் சாதனை
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். இதுவும் சாதனையாகும்.
தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
உடல் உறுப்புத்தானத் திட்டம்....
கடந்த 2008ம் ஆண்டுதான் தமிழகத்தில் உடல் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் 288 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர்.
செஞ்சுரி அடிச்சாச்சு...
ஆனால் தற்போது இந்த ஆண்டில் இதுவரை 100 பேர் தானம் செய்திருப்பது பெரும் சந்தோஷத்துக்குரிய செய்தியாகும்.
300க்கும் மேற்பட்ட பயனாளிகள்...
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன் கூறுகையில், இதுவரை 300 பேருக்கும் மேல் உடல் உறுப்பு தானத்தால் புத்துயிர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர்.
தமிழகம் தான் பெஸ்ட்...
வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை. இதில் பாதி கூட இல்லை.
இன்னும் கூடும்....
இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஐந்தாவது ஆண்டு முடிகிறது, அதற்குள் 110 பேர் உடல் உறுப்பு தானம் செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.