சீனாவில் கடும் நிலநடுக்கம் 4 பேர் பலி... பலர் படுகாயம்
பீஜிங்: பீஜிங் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மேற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.9 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் அளவு 5.8 என்று அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
யுனான், சிசுவான் மாகாணங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. ஷாங்கிரி லா என்ற இடத்தில் நிலநடுக்கத்தின் மையம் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 வீடுகள் சரிந்து சேதமடைந்தன. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர். கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டதால் பல பகுதிகளின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வீடுகள் இடிந்து விழுந்த இடிபாடுகளிலும் நிலச்சரிவிலும் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர். பென்சிலான் நகரில் 2 பேரும், ஷாங்ரி லாலில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். பல கட்டடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரு பஸ் நசுங்கிப் போய் விட்டது. மேலும் 3 பஸ்களும் சேதமடைந்தன. அந்த பஸ்களில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கதி தெரியவில்லை.
கடந்த 2008ம் ஆண்டு மேமாதம் சிசுவான் மாகாணத்தில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 90,000 பேர் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம்.