இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு 'அந்தர் பல்டி'!
இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது அதில் ஒன்று ஆகும். ஆனால் இது குறித்து இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை. இது என்னுடைய கருத்தும் இல்லை என்றார்.
பெட்ரோல் தேவையை 3 சதவீதம் குறைத்து ரூ. 16,000 கோடியை சேமிக்கும் வகையில் பெட்ரோல் சிக்கனம் குறித்து வரும் 16ம் தேதி முதல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த பெட்ரோலியத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தேவையை கட்டுப்படுத்த காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எந்த திட்டமும் எங்கள் அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படவில்லை என்று பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே தெரிவித்தார்.
இது குறித்து பாஜக செயதித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில்,
பெட்ரோல் பங்குகள் என்றால் என்ன? அரசு நாட்டையே மூடிவிடும். மக்கள் காலை நேரத்தில் காருக்கு பெட்ரோல், டீசல் போட விரும்பமாட்டார்களா? இது மொய்லியின் மோசமான திட்டம். மன்மோகன் சிங் அரசுக்கு ஐடியா எதுவும் கிடைக்கவில்லை என்றால் பாஜகவிடம் கேட்கலாமே என்றார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மொய்லி, பெட்ரோல் பங்குகளை இரவில் மூடும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. பெட்ரோல் பங்குகளை இரவில் மூடும் ஐடியா எங்களுடையதே அல்ல. இந்தக் கோரிக்கையை வைத்ததே பொது மக்கள் தான். ஆனால், மத்திய அரசு இதை செய்யாது என்றார்.