திருமண உதவி வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏழை பெற்றோர்களின் பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என பெண்கள் நலனுக்காக 5 விதமான திருமண நிதியுதவித் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஏனைய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு குறைவாக உள்ளதால், அதிக அளவில் ஏழை எளிய மக்களால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற இயலவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு,முதல்வர் ஜெயலலிதா அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் நிதி உதவி பெற தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுகின்றது.
சத்துணவு கூடங்களுக்கு மிக்சி
இதே போல் மற்றொரு அறிக்கையில் சத்துணவு மையங்களில் உணவுகளை தரமாகவும், உரிய நேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு மிக்சி வழங்க ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மேலும், இந்த மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் உள்ள 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு தலா ஒரு (எவர்சில்வர்) கரண்டி 66 ரூபாய் விலையிலும், ஒரு (இண்டோலியம்) கடாய் 495 ரூபாய் விலையிலும் என மொத்தம் 561 ரூபாய் வீதம் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய் செலவில் வாங்கி வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications