இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் பற்றாக்குறை அதிகம்: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசுக்கு உதவி செய்த காற்றாலையின் மின் உற்பத்தி தற்போது கைவிட்டுவிட்டது.
மின்சாரம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் விவசாயம் செய்ய ஆரம்பித்த விவசாயிகள், பயிர் பாழாகி வருவதால் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பற்றாக்குறையை பற்றி மத்திய மின்சார ஆணையம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சாரத்தின் உச்சத் தேவை 14,970 மெகாவாட் என்றும், ஆனால் மின் உற்பத்தியோ 9,870 மெகாவாட் மட்டுமே என்றும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையோ 5,100 மெகாவாட் என்றும் அதில் தெரிவிக்கிறது.
நிபுணர்கள் அடங்கிய மத்திய மின்சார ஆணையமே, இந்த தகவலை வெளியிட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் மின்வெட்டை அறவே நீக்கிட தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications