வேழ முகத்தோனை வணங்கி வழிபட்டு இன்பம் பெருகி வாழ வேண்டும்- ஜெ. வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி..
முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும் மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம்; மாமலராள்
நோக்கு உண்டாம், மேனி நுடங்காது- பூக்கொண்டு
என்ற பாடலில், தமிழ் மூதாட்டியாம் ஒளவைப் பிராட்டியார், தும்பிக்கையுடன் கூடிய திருமேனி கொண்ட விநாயகரை வணங்கி அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு நல்ல சொல்வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என்று கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மக்கள் தங்கள் இல்லங்களில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல்லோடு எருக்கம் பூ,அரளி மலர் மாலைகள் சூட்டி கொழுக்கட்டை, சுண்டல்,பொரி,அவல் போன்றவற்றைப் படைத்து பயபக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய்நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.