‘காற்று வாங்கப் போய்’ காய்ச்சல் வாங்கிட்டு வந்துடாதீங்க:பூச்சிக்கடி காய்ச்சலுக்கு டாக்டர்ஸ் அட்வைஸ்
டெல்லி: ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் சற்றும் குறையாமல் அனலாக கொதித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஏதாவது உண்ணி தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பூச்சி கடி மூலம் பரவும் புதிய வகை அரிய காய்ச்சலாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்கிரப் தைபஸ்...
இந்த அரிய வகை காய்ச்சலுக்கு ஸ்கிரப் தைபஸ் Scrub typhus என்று பெயர்.
சிட்டிக்கு வந்த காய்ச்சல்....
இதுவரை இந்தக் காய்ச்சல் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில்தான் அதிகம் உள்ளது. ஆனால் தற்போது டெல்லி, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் இது பரவியுள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
பூச்சிக்கடி காய்ச்சல்....
இந்த அரிய வகை காய்ச்சலானது பூச்சிக் கடியால் பரவுகிறதாம். அதாவது உண்ணி என்று அழைக்கப்படும் சிறிய வகை பூச்சியால் பரவுகிறது.
ஆபத்தான காய்ச்சல்....
டெங்கு காய்ச்சல் வந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றுமோ அதுவே இந்த காய்ச்சலின்போதும் ஏற்படும். சாதாரண வைரஸ் காய்ச்சல் போலத்தான் இதுவும் இருக்கிறது. ஆனால் அதி பயங்கர ஆபத்தானதாம் இந்த அரிய வகை காய்ச்சல்.
500 பேர் பாதிப்பு....
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இந்தக் காய்ச்சல் தற்போது அதி வேகமாக பரவி வருகிறதாம். இதுவரை 500 பேருக்கும் மேல் பரவியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
டாக்டர்கள் நம்பிக்கை....
அதேசமயம், இந்த காய்ச்சலால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றும், தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால் சாதாரண ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடக் கூடியதுதான் இது என்றும் டாக்டர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
உடல் உறுப்புகள் செயலிழக்கலாம்....
ஆனால் இந்தக் காய்ச்சலை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கத் தவறினால் அது மரணத்தில் போய் முடிந்து விடுமாம். உடல் உறுப்புகள் முற்றிலும் செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடுமாம்.
நோய் முற்றினால் ஆபத்து...
இதுகுறித்து ஒரு டாக்டர் கூறுகையில், சில டாக்டர்களுக்கே கூட இந்த நோயை டயக்னைஸ் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பலருக்கு நோய்முற்றிய நிலையில் வேறு மருத்துவமனைகளுக்குப் போவதால் அங்குள்ள டாக்டர்களால் உரிய சிகிச்சை தர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது என்றார்.
சிக்கல்....
ஸ்கிரப் டைபஸ் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், டாக்ஸிசைக்ளின் அல்லது அஸித்ரோமைசின் கொடுத்தே சரிப்படுத்தி விட முடியுமாம். 2 அல்லது வாரம் தாமதமாகி விட்டால் சிக்கல் என்கிறார்கள்.
மலைப்பகுதி மட்டும் இல்லை....
மலைப்பகுதிகளில் மட்டும்தான் இந்த காய்ச்சல் வரும் என்று கூற முடியாது. டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கூட இது பரவியுள்ளது. எனவே எங்கு வேண்டுமானாலும் இது வரும் என்று டாக்டர் புத்திராஜா என்பவர் கூறுகிறார்.
வாக்கிங் போனால்....
பார்க்குகளில் வாக்கிங் போவோர், யோகா செய்வோருக்கு இது உண்ணிகள் மூலம் பரவலாம். பச்சைப் பசுமையான பகுதிகளில் இத்தகைய காய்ச்சலை ஏற்படுத்தும் பூச்சிகள் அதிக அளவில் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
விழிப்புணர்வு....
இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை அரசுகள் சுகாதாரத்துறை மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது கடமை என்றும் மக்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன், கவனமாக இருப்பது அவசியம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.