வட தமிழகத்தில் 48 மணி நேரத்தில் பரவலாக கன மழை - வானிலை மையம்
சென்னை: வடக்கு தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரக் கடலோரம், வடக்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 48 மணி நேரத்தில் வடக்கு தமிழகம் புதுச்சேரியில், பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளாகவும் வானிலை மையத் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை லேசாக வெயில்அடித்த நிலையில் மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
விடிய விடிய மழை
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றும் இரவு முழுவதும் மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக்கி விட்டது. 2 நாட்களாக சென்னை நகரையும், புறநகர்ப் பகுதிகளையும், பிற வட மாவட்டங்களையும் நல்ல மழை குளிர்வித்து வருகிறது.
புரட்டிப் போட்ட மழை
கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் சென்னையை மழை புரட்டிப் போட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.
இரவு 8 மணிக்கு மேல்
நேற்று இரவு 8 மணிக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சின்ன மழையாக தொடங்கிய இது பின்னர் இடி மின்னலுடன் பலத்த மழையாக மாறியது.
விடாமல் வெளுத்தது
இரவு முழுவதும் இடியும், மின்னலுமாக நகரையும், நகரின் பிற புறநகர்ப் பகுதிகளையும் மழை பதம் பார்த்தது.
எங்கு பார்த்தாலும் மழை
சென்னை நகரின் உட்பகுதிகள் அனைத்தும் இரவு பெய்த மழையால் நனைந்து நடுங்கின. கிழக்குக் கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஆற்காடு சாலை என நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு மழை நீர் வெள்ளம் போல ஓடியது.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலஓடியதால் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இரவெல்லாம் மக்கள் தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
வழக்கம் போல பள்ளிக்கரணை
வழக்கம் போல வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பள்ளிக்கரணை பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு குடியிருப்புகள் நீரில் மிதந்தன.
மரங்கள் வேரோடு சாய்ந்தன
அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் சில இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கொசு மருந்து தெளிப்பு- தண்ணீர் இறைக்கும் பம்ப்புகள்
நகர் முழுவதும் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்டவற்றைப் பரப்பி விடாமல் தடுப்பதற்காக கொசு மருந்து தெளிப்புப் பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. அதேபோல தண்ணரீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்ப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.
2 பேர் மரணம்
மழைக்கு நேற்று 2 பேர் சென்னையில் பலியானார்கள். குன்றத்தூர் பகுதியில் ஒரு ஆணும், அய்யப்பன்தாங்கல் பகுதியில், ஒரு பெண்ணும் மழைக்குப் பலியானார்கள்.
கடலோரத் தமிழகத்தில் பரவலாக மழை
இன்றும் கடலோரத் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், நீலகிரி மாவட்டம் தேவலாவில் அதிகபட்சமாக 13 செமீ மழை பெய்துள்ளது. பரமத்தி வேலூர், செந்துறை, குடவாசல், போச்சம்பள்ளி, ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில்
அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
சென்னையில்...
சென்னையைப் பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்தில், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.