இனி துபாய்க்கு பறக்கலாம் ஜாலியா.. கொரோனா சோதனை தேவையில்லை.. ஹாப்பி நியுஸ் கொடுத்த அரபு எமிரேட்ஸ்.!
அபுதாபி : தங்கள் நாட்டுக்கு வருவதற்கு முன்பு விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையை இந்திய பயணிகள் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவி லட்சக்கணக்கானோரை பாதித்தது.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். பொருளாதார ரீதியாகவும் பலத்த சேதத்தை உலக நாடுகள் சந்தித்தன.

கடும் கட்டுப்பாடுகள்
இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதித்தன. குறிப்பாக விமான நிலையங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு குறைந்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. விமான பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் பாதிப்பு குறைந்து வருகிறது.

புதிய விதிமுறைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனாவும், 235 இறப்புகளும் பதிவாகி உள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு புதிய விதிமுறைகளுடன் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

RTPCR சோதனை
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையங்களில் இந்தியப் பயணிகள் விரைவான RTPCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகளை துபாய் செவ்வாய்க்கிழமை நீக்கியது. புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை வழங்கும் நிறுவங்களிடமிருந்து, திட்டமிடப்பட்ட விமானம் புறப்படுவதற்கு 48 மணிநேரம் வரை எடுக்கப்பட்ட எதிர்மறையான COVID-19 சோதனைச் சான்றிதழை இந்தியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பயணிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தான் நீக்கப்பட்டுள்ளது.

எளிதான நிலை
ட்ரான்ஸிட் பயணிகளுக்கும், கடைசி நேர பயண திட்டமிட்டவர்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். அதே நேரத்தில் பயணத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு விமான நிறுவனங்களைச் சார்ந்தது எனவும் எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. பயணத் தேவைகளில் திருத்தம் செய்வது, நகரத்தில் வசிக்கும் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் ஏராளமான இந்தியர்களின் நிலைமையை இந்த அறிவிப்பு எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications