வாக்கு எண்ணும் மையத்திற்கு திமுக எம்எல்ஏ திடீர் விசிட்.. பெட்டிகளை மாற்றியதாக அதிமுகவினர் போராட்டம்
திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றியத்தின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை திமுக எம்எல்ஏ தேவராஜ் இன்று ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைக் கண்டித்த அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என்று இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை வரும் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக எம்எல்ஏ ஒட்டுப் பெட்டிகளை மாற்றியதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தின் வாக்கு பெட்டிகள் ஆலங்காயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஜோலார்பேட்டை திமுக எம்எல்ஏ தேவராஜ் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துள்ளார்.
திமுக எம்எல்ஏ
அங்கு இருந்து பாதுகாப்பு தடுப்புகளைத் தாண்டி அவர் உள்ளே சென்று வாக்கு பெட்டிகளைப் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கிருந்த பிறகு தேவராஜ், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இது பற்றி தகவல் வெளியானதும் வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார் ஆகியோருடன் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர்.
சாலை மறியல்
திமுக எம்எல்ஏ வாக்கு பெட்டிகளை மாற்றிவிட்டதாகக் கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஆலங்காயம் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே இருந்த சேர்கள், மேஜைகளை தூக்கி வீசி அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாணியம்பாடி சட்டசபை உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், "திமுகவினர் வாக்கு பெட்டிகளை மாற்றியுள்ளனர். இதில் ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தனது மனைவியை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தியுள்ளார் அதில் வெற்றி பெறவே இவ்வாறு முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.