திரும்ப திரும்ப அதையே கேக்குறீங்க.. அதுக்கு வேலையே இல்லை.. கட் அண்ட் ரைட்டா சொன்ன டிடிவி.தினகரன்!
அரியலூர் : அதிமுகவுடன் அமமுக இணையாது, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருந்தாலும் அமமுகவில் இணைய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அங்கிருப்பவர்கள் ஒரு சகுனி கூட்டம் போல் இருக்கிறார்கள் என தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியில் அமமுக அதிமுகவில் இணையுமா என்ற கேள்வியால் டிடிவி தினகரன் சூடாகப் பேசியுள்ளார்.

டிடிவி தினகரன்
அரியலூரில் அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், "தற்போது அதிமுகவில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் பற்றியும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அதிமுகவில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். ஆனால், அதனை அவர் யாருக்கோ பயந்து கொண்டு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

அப்போதாவது தெரியுமே
இதுகுறித்து நான் பேசியபோது என் மீது வழக்கு தொடுக்கப்படும் என முனுசாமி கூறியுள்ளார். என் மீது வழக்கு தொடருங்கள். அந்த வழக்கை சந்திக்க தயார். அப்போதாவது பொன்னையன் பேசிய ஆடியோவின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு அதிமுகவில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். நீங்கள் யாரென்று தோலுரித்து நீதிமன்றத்தில் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அழிந்து போவார்கள்
அதிமுகவில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டி விட எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.

எனக்கே பாவமாக இருந்தது
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. பாவம் ஓபிஎஸ் இன்று அனுபவிக்கிறார். நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்." எனப் பேசினார்.

சகுனி கூட்டம்
மேலும், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி.தினகரன், "அதிமுகவில் துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அங்கிருப்பவர்கள் ஒரு சகுனி கூட்டம் போல் இருக்கிறார்கள். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைக்க போராடி வருகிறோம்.

அதிமுகவில் இணையமாட்டோம்
அமமுக ஒருபோதும் அதிமுகவில் இணையாது. வருங்காலத்தில் அதிமுக கட்சி எந்த நிலையில் இருந்தாலும் அதனை மீட்டெடுப்போம். இந்த நேரத்தில் அந்தக் கட்சி விவகாரத்தில் நாங்கள் என்ன தலையிட முடியும்? பண மூட்டைகளோடு அவர்கள் அலைந்து கொண்டிருக்கும்போது மனிதர்களுக்கு வேலையில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications