சொத்துக்காக எனது மகளை கட்டாயப்படுத்தி கட்டி வச்சுட்டாங்க.. காடுவெட்டி மனைவி கதறல்
எனது மகளுக்கு கட்டாய கல்யாணம் நடந்துள்ளது என லதா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
Recommended Video
அரியலூர்: "கொஞ்சம்கூட விருப்பமில்லாமல் என் மகளுக்கு இந்த கல்யாணம் நடந்துள்ளது, எல்லாமே எங்களுடைய சொத்துக்களுக்காகத்தான்" என்று காடுவெட்டி குருவின் மனைவி லதா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே காடுவெட்டி குருவின் குடும்பத்தில் பிரச்சனைகள் புயல் என சுழன்று அடிக்க, தற்போது மகளின் திருமணம் சம்பந்தமாக பிரச்சனை இன்னும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
[ஊருக்குள் எங்களை மிரட்டுகிறார்கள்.. கணவருடன் போலீஸில் தஞ்சமடைந்த காடுவெட்டி குரு மகள் ]
மீனாட்சி தலைமை
இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்தும் வந்தனர். இந்த காதல் கல்யாணத்தில் லதா கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. காடுவெட்டி குருவின் அக்கா மீனாட்சிதான் இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.
போலீசில் தஞ்சம்
இந்த நிலையில் மாலையும் கழுத்துமாக இந்த ஜோடி இன்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டார்கள். தாங்கள் இப்படி கல்யாணம் செய்து கொண்டதால் ஊருக்குள் எங்களை விட மறுத்து மிரட்டுகிறார்கள் என்று போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள் சொன்னார்கள்.
சமாதியில் அழுதார்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காடுவெட்டி குருவின் மனைவி லதா அடுத்த பகீரை கிளப்பியுள்ளார். இவ்வளவு நாள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் பெற்றோர் வீட்டிலிருந்த லதா, இன்று நேராக காடுவெட்டி கிராமத்துக்கு வந்துவிட்டார். அங்கு குருவின் சமாதியில் உட்கார்ந்து மகளின் திருமணத்தை பற்றி சொல்லி அழுது புலம்பினார். பின்னர் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடமும் லதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விருப்பமில்லாத திருமணம்
எனக்கு எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் எனது மகள் விருத்தாம்பிகைக்கும் எனது கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சாவித்திரி முயற்சி
ஆனால் முறைப்படி எனது கணவரின் சொத்துக்கள் அனைத்தும் எனது மகனுக்கு சொந்தம். அவனின் பெயரிலேயே சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். சொத்துக்காக எனது குடும்பத்தை என்னை விட்டு பிரிக்க குருவின் தங்கை சாவித்திரியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ்
உடல்நிலை சரியில்லாமல் எனது பெற்றோரின் வீட்டில் இருந்தபோது மருத்துவமனைக்கான அனைத்து செலவுகளையும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பார்த்து கொண்டனர்."இவ்வாறு லதா தெரிவித்தார்.
அதிகரிக்கும் குழப்பம்
ஒரு பக்கம் திருமணம் நடந்து மகள் போலீஸ் ஸ்டேஷனே போய் புகார் கொடுத்துள்ள நிலையில், விருப்பமே இல்லாமல் மகளின் திருமணம் நடந்துள்ளது என்று லதா கூறியுள்ளது இன்னும் அதிகமான குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.