இந்திய அணியில் இடம்.. ஆனால் குடும்ப நிலை.. அறிந்ததும் முதல்வர் போட்ட ஆர்டர் - பறந்து சென்ற அமைச்சர்!
அரியலூர் : இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் கார்த்திக்கிற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளம் வீரர், இந்திய அணிக்குத் தேர்வான நிலையில், அவரது பெற்றோர் பண வசதி இன்றி தவிக்கும் தகவல் ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட, உடனே கார்த்திக்கின் வீட்டுக்கே சென்ற அமைச்சர் சிவசங்கர், நிலையைக் கேட்டறிந்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.

ஹாக்கி வீரர்
அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார். கார்த்திக்கின் தந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றியவர். தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வருகிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கை, அவரது பெற்றோர் நன்றாக படிக்க வைத்ததோடு, விளையாட்டிலும் சாதிக்க உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

கார்த்திக்
பெங்களூர் சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார். ஆனால், பயிற்சி பெறவும் அடுத்தகட்ட நிலைகளுக்குச் செல்வதற்கும் போதிய வசதி இல்லாமல் கார்த்திக்கின் பெற்றோர் தவித்து வருகின்றனர். கார்த்திக்கின் பெற்றோர் வறுமையில் வாடும் செய்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

உடனே பறந்த உத்தரவு
இதையடுத்து, உடனே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கார்த்திக்கின் வீட்டுக்கே சென்று அவரது பெற்றோரை சந்தித்து, அவர்களின் நிலையைக் கேட்டறிந்தார்.

முதல்வர் கையால் உதவி
பின்னர், கார்த்திக்கின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், வரும் நவம்பர் 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால் இந்த தொகை, கார்த்திக்கிற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மேலும், கார்த்திக்கின் விளையாட்டு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்து தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கார்த்திக்கின் குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications