'நீ தமிழரசனா.. ஆமாம்.. நீங்க யாரு?' 'நான் தான்டா உன் மாமியார் சரோஜா'.. பரபரப்பு வாக்குமூலம்
அரியலூர்: அரியலூர் அருகே மகளை கொன்ற மருமகனை கொலை செய்ய மொட்டை அடித்து பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து அவரது வீட்டிற்கு சென்று மாமியார், நீ தான் தமிழரசனா என்று எழுப்பி கேட்டுவிட்டு, சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார்,. இதுபற்றி அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் சரோஜா தம்பதிக்கு பிரியா என்கிற மகள் இருந்தார் . தன் மகள் பிரியாவை மிகுந்த பாசத்துடன் வளர்ந்த சரோஜா, அதே ஊரில் பால் வியாபாரம் செய்யும் தமிழரசனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் முடிந்து தன் மகள் சந்தோஷமாக இருப்பார் என்று நினைத்த சரோஜாவிற்கு 3 மாதத்திலேயே இடியாய் செய்தி வந்தது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரத்துடன் தமிழரசன் தாக்கியதால், சரோஜாவின் மகள் பிரியா பரிதாபமாக இறந்து போனார். இதனால் தமிழரசன் சிறைக்கு போனார். மகளை கொன்ற மருமகன் சிறைக்கு போனாலும், அவர் மீது மாமியார் சரோஜா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனிடையே சிறையில் இருந்து 3 மாதங்களிலேயே தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், தன் மகளை கொன்ற தமிழரசனை கடந்த செவ்வாய்கிழமை அன்று நள்ளிரவில் சரோஜா வீடு புகுந்து வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தமிழரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் செய்த சரோஜாவை கைது செய்த ஆண்டி மடம் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கினர். அப்போது சரோஜா கூறுகையில் , நான் பாராட்டி சீராட்டி பார்த்து பார்த்து பாசமாக வளர்த்த எனது மகள் சரோஜாவை தமிழரன் கொன்றுவிட்டார். என் மகளை கொன்ற தமிழரசன் சிறையில் இருந்து 3 மாதங்களில் வெளியே வந்து விட்டான். எனவே எனது மகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தமிழரசனை கொலை செய்ய நான் முடிவு செய்தேன். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் குறிகேட்டேன். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொட்டை அடித்துக்கொண்டேன்.
மேலும், சேலையில் சென்று வெட்டினால் யாரேனும் என்னை அடையாளம் கண்டு பிடிக்கக்கூடும் என்று நினைத்தேன். இதன் காரணமாக நான் எனது மகனின் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு போனேன். தமிழரசன் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கியது யார்? என்பது எனக்கு உடனே பார்த்த உடன்தெரியவில்லை. இதனால் கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தவரிடம் போர்வையை இழுத்து தமிழரசன் தானே? என கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று கூறினார். நீங்க யாரு? என என்னிடம் மருமகன் கேட்டார். இந்த வார்த்தையை நான் கேட்டவுடன், நான் தான்டா உன் மாமியார் எனக்கூறி ஆவேசமாக தமிழரசனை சரமாரியாக வெட்டினேன். படுகாயம் அடைந்த தமிழரசன் பிழைக்க இனி வாய்ப்பு இல்லை" இவ்வாறு அரியலூர் சரோஜா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications