நெருங்கிய தேர்தல்.. போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு.. அமைச்சருடன் தொடர்புடையவர் கைது! பரபர கர்நாடகா
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பெங்களூரில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, லைசென்ஸ் மற்றும் பார்ன் கார்டுகள் தயாரித்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் கர்நாடகா அமைச்சர் பைரதி சுரேசுடன் தொடர்புடையவர் என கூறப்படுவதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெங்களூரில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, லைசென்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து 3 பேரை போலீசார் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் மவுனேஷ் குமார், பகத் மற்றும் ராகவேந்திரா என்பது தெரியவந்து. இவர்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் போலியாக ஆதார், வாக்காள் அடையாள அட்டை உள்பட பல முக்கிய ஆவணங்களை தயாரித்து பொதுமக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மவுனேஷ் குமார் அமைச்சர் பைரதி சுரேசுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. அதாவது முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான பைரதி சுரேஷ் தற்போது நகர மேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் துறையை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் பைரதி சுரேசுடன், கைது செய்யப்பட்டுள்ள மவுனேஷ் குமார் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மவுனேஷ் குமார், பைரதி சுரேஷ் கேக் ஊட்டி விடும் போட்டோ மற்றும் பைரதி சுரேசுக்கு, மவுனேஷ் குமார் வாழ்த்து தெரிவித்து அடித்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கியதாக 3 பேர் சிக்கி உள்ளனர். அதோடு மவுனேஷ் குமார் காங்கிரஸ் அமைச்சர் பைரதி சுரேசுடன் தொடர்புடையவராக உள்ளதால் இந்த விஷயத்தை பூதாகரமாக்க எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பைரதி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛தினமும் என்னை 400 முதல் 500 பேர் சந்தித்து போட்டோ எடுத்து செல்கின்றனர். யாராவது என்னுடன் புகைப்படம் எடுத்து ஏதாவது தவறு செய்தால் அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டுமா?. என்னுடன் அவர் இருக்கும் போட்டோ வெளியானது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
மேலும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் மாநிலத்தில் போலீஸ் என்பது நமது அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தூக்கிலிடட்டும்'' என்றார். இந்த வேளையில் கைது செய்யப்பட்டவர்கள் உங்களுக்கு தெரியுமா? என கேட்டபோது, ‛‛அனைவரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஏனென்றால் கர்நாடகாவில் உள்ள 7 கோடி மக்களுக்கும் எனக்கு தெரிந்தவர்கள் தான். அப்படி இருக்கும்போது ஒருவர் தவறு செய்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா? விசாரணை நடக்கட்டும். விசாரணை முடிவில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications