அரசு கான்டிராக்ட்களில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு! கர்நாடக சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. சிறுபான்மையினருக்கு அரசு ஒப்பந்தங்களில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகா மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் இன்று ரூ1 கோடி வரையிலான கர்நாடகா மாநில அரசின் ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதாவுக்கு பாஜக தலைவர்கள் எடியூரப்பா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அப்பட்டமாக, முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நடவடிக்கை எனவும் பாஜக, ஜேடிஎஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே, முஸ்லிம்களுக்கு மட்டுமே 4% இடஒதுக்கீடு தரவில்லை; அனைத்து சிறுபான்மையினருக்கும்தான் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனாலும் இன்று அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தக் கூடும் என்கிற சூழல் நிலவுகிறது. இதனால் கர்நாடகா சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் தங்கக் கடத்தலில் நடிகை ரன்யா ராவ் சிக்கிய விவகாரம், பெங்களூரில் ரூ75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பிடிபட்டது உள்லிட்ட விவகாரங்களையும் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இன்று சட்டசபையில் எழுப்பி போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications