பள்ளமான ரோடு.. தேங்கிய மழைநீர்.. பதறிய ஓட்டுனர்கள்.. கையில் சூலாயுதத்துடன் ஆக்ரோஷமான ‛‛துர்கா’’
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள உப்பள்ளியில் சேதமடைந்த ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க கையில் சூலாயுதத்துடன், முகத்தில் ஆக்ரோஷத்துடன் துர்கா வேடமணிந்து 9 வயது சிறுமி சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற வீடியோ வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.
நாடு முழுவதும் நவராத்திரி பூஜை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, ஆயுத பூஜை, தசரா விழா கொண்டாடவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கர்நாடகத்தில் மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில் நவராத்திரி விழாவின் ஒருபகுதியான துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

சேதமடைந்த ரோடு
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பல்வேறு இடங்களில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை வேளைகளில் ரோட்டில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

துர்கா வேடத்தில் சிறுமி
இந்நிலையில் தான் உப்பள்ளியில் ரோடு பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஹர்சிதா (வயது 9) என்ற சிறுமி சேலை அணிந்து கழுத்தில் மாலை அணிந்து, தலையில் கிரீடம், கையில் சூலாயுதத்துடன் ஆக்ரோஷமாக நடந்து சென்றார். ஹர்சிதா துர்கா வேடத்தில் நடந்து சென்றார். திடீரென்று ஒரு சிறுமி இப்படி ரோடு பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்வதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் என்ன?
இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதுபற்றி விசாரித்தபோது, உப்பள்ளியில் உள்ள பல சாலைகள் நீண்டகாலமாக சேதமடைந்துள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடும்பத்தினர் உதவியுடன் துர்கா வேடமணிந்து ஹர்சிதா சாலையில் நடந்து சென்றது தெரியவந்தது.

தொடரும் சம்பவம்
கர்நாடகாவில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி மட்டுமின்றி தலைநகர் பெங்களூர், மைசூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் மழைக்காலங்களில் குண்டும், குழியுமாக மாறுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு உருவாகும் குண்டும், குழிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் தவறும்பட்சத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில செயல்களை செய்வார்கள். அதன்படி சாலை பள்ளங்களில் கடல் கன்னி, முதலை இருப்பது போல் ஓவியங்கள் தீட்டப்பட்டு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் செயல்களும் நடந்துள்ளன. அந்த வரிசையில் தான் தற்போது சிறுமி துர்கா வேடமணிந்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.












Click it and Unblock the Notifications