கொடூரத்தின் உச்சம்.. 13 வயது சிறுவனை.. மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. பதறிப்போன கிராம மக்கள்!
பெங்களுரு: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டண தாலுகாவில் உள்ளது பெலகோலா கிராமம். இங்கு ஹர்ஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 13 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சில ஆடுகள் தோட்டத்துக்குள் நுழைந்து விட்டது.

மரத்தில் கட்டி போட்டனர்
இதனை தொடர்ந்து ஆடுகளை அழைத்து வருவதற்காக அந்த சிறுவனும் தோட்டத்துக்குள் நுழைந்தான். இதனால் தோட்டத்தின் உரிமையாளர் ஹர்ஷா ஆத்திரம் அடைந்தார். இதன்பின்பு ஹர்ஷாவும், தோட்ட ஊழியர்களும் அந்த சிறுவனை அழைத்து மரத்தில் கட்டி போட்டனர். தொடர்ந்து சிறுவன் என்றும் பாராமல் அவனை கொடூரமாக அடித்துள்ளனர்.

சிறுவன் அலறினான்
வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அலறி துடித்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து கிருஷ்ணராஜா சாகரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். மரத்தில் கட்டிப்போட்ட சிறுவனை மீட்டனர். சம்பவம் நடந்த போது சிறுவனின் தந்தையும் அங்கு இருந்தார்.

கொலை செய்து விடுவேன்
''என் மகன் தெரியாமல் வந்து விட்டான். அவனை விடுவிக்கும்படி நான் ஹர்ஷாவிடம் கேட்டுக்கொண்டபோது, ஆனால் ஹர்ஷா எங்கள் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்'' என்று சிறுவனின் தந்தை மஞ்சுநாத் கூறினார். சிறுவனின் குடும்பத்தினர் தும்குரு மாவட்டத்தில் உள்ள சிராவைச் சேர்ந்தவர்கள்.

போலீசார் வழக்குப்பதிவு
தந்தையும், மகனும் ஆடுகளுக்கு மேய்ச்சல் நிலங்களைத் தேடி மண்டியாவுக்கு வந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை மஞ்சுநாத் கொடுத்த புகாரின்பேரில் சிறுவனை அடித்த ஹர்ஷா உள்ளிட்டவர்கள் மீது கிருஷ்ணராஜா சாகரா போலீசார் சிறுவனை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications