பெங்களூரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு வந்த வில்லங்க ஆசை.. தொலைந்த வாழ்க்கை
பெங்களூர்: பெங்களூரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால் கொள்ளையனாக மாறிய நபரால், அவரது கூட்டாளிகளும் இப்போது சேர்ந்து கம்பி எண்ணுகிறார்கள்.. கூடா நட்பு கேடில் முடியும் என்பார்களே அப்படித்தான் நடந்துள்ளது. சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசையில், போலீஸ் போல சென்று, போலீசிடம் சிக்கி, இப்போது சிறையில் இருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பெங்களூரில் வித்யாரண்யாபுரா பகுதியில் வசித்து வருபவர் நவீன், இவர் தொழிலாளியாக உள்ளார். இந்தநிலையில் கடந்த நவம்பர் 7-ந் தேதி நவீன் வீட்டில் இருந்த போது அவரது வீட்டிற்குள் 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்திருக்கிறது. அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் நவீனின் வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் வந்ததாகவும், எனவே வீட்டில் சோதனை நவீன் வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்கள் நவீனை கஞ்சா வழக்கில் கைது செய்வதாக கூறினர். இதில் பயந்த நவீனிடம், அந்த கும்பல் கைது செய்யாமல் இருக்க பணம் தரும்படி கேட்டு மிரட்டி உள்ளார்கள்.
இந்தநிலையில் நவீன் பணம் கொடுக்க மறுக்கவே, அவர்கள் நவீனை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை மிரட்டி ரூ.50 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.87 ஆயிரத்தையும் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றி கொண்டார்கள். மொத்தம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தன்னிடம் வழிபறி செய்தது போலீஸ் அல்ல என்பதை உணர்ந்த நவீன், வித்யாரண்யாபுரா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக பெங்களூருவை சேர்ந்த மல்லிகார்ஜூனா (வயது 33), பிரமோத் (30), வினய் (27) மற்றும் கிருதிக் (26) ஆகிய 4 பேரை கைது செய்தார்கள்.
இதில் மல்லிகார்ஜூனா 2 முறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர் என்று கூறப்படுகிறது. போலீஸ் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் அவர் தனது கூட்டாளிகளுடன் திருட்டு, கொள்ளையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக போலியாக சப்-இன்ஸ்பெக்டரின் சீருடையை தயார் செய்து வைத்து கொண்டு, இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது அவர் அந்த சப்-இன்ஸ்பெக்டர் சீருடையை அணிந்துள்ளார். பின்னர் நவீனிடம் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ரூ.1¼ லட்சம் பணமும், போலி சப்-இன்ஸ்பெக்டர் சீருடையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications