கர்நாடகா சார்பில் உரிய நீர் வழங்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
பெங்களூர்: மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட மாதங்களில் தமிழகத்துக்கான நீரை கர்நாடக அரசு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17ல் அதன் தலைவர் எஸ்கே ஹல்தேர் தலைமையில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
இந்த அறிவிப்பின்போது கர்நாடக அரசின் கோரிக்கைப்படி கூட்டத்தில் காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதோடு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இதற்கிடையே தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது கடந்த 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் புதிய அணை கட்டினால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு முறையாக நீர் பங்கீடு கிடைக்காது. மேலும் காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பது என்பது ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மேகதாது பற்றி விவாதிக்க தடை
இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்க தடை விதித்தனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 26க்கு ஒத்திவைத்தனர்.

இன்று கூடும் ஆணையம்
இந்நிலையில் தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்கே ஹல்தார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் டெல்லி சென்றனர்.

உரிய நீர் வழங்க..
இதையடுத்து டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்துக்கான உரிய நீரை குறிப்பிட்ட மாதங்களில் முறையாக கர்நாடகம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அதிகாரிகள் கூறினார். இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு அதிகாரிகள் பங்கேற்று தங்கள் தரப்பு முக்கிய விஷயங்களை எடுத்து கூறினர்.












Click it and Unblock the Notifications