அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல்.. மங்களூருக்கு ரூ.3800 கோடி திட்டங்களை ஆரம்பித்து வைத்த மோடி
பெங்களூர்: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மங்களூருக்கு ரூ.3800 கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்தார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தொடர்ந்து கர்நாடகம் சென்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக தென்இந்தியா வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குறிப்பாக ஐஎன்எஸ் விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கேரள விசிட் .. 'ஆபரேஷன் சவுத்' திட்டத்துக்கு டீசர்?.. பின்னணி என்ன?
ரூ.3,800 திட்டத்தை துவக்கிய மோடி
இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு தனி விமானத்தில் வந்தார். மங்களூர் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மங்களூர் துறைமுக பகுதியில் ரூ.3,800 கோடி மதிப்பிலான தொழிற்மயமாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதிக சரக்கு கையாள வசதி
அதன்படி மங்களூர் புதிய துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.281 கோடி செலவில் திட்டம் துவங்கப்பட்டது. இதன்மூலம் சரக்குகள் விரைவாக கையாளலாம். அதாவது 1.50 லட்சம் டிஇயூவில் இருந்து 4 லட்சம் டிஇயூவாக 2025க்குள் அதிகரிக்க முடியும். இந்த திடத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டது.
முன்னணி துறைமுகமாக...
மேலும் துறைமுக மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டம் துவங்கப்பட்டது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்கள் கையாளும் வசதிக்கான அமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 45 ஆயிரம் டன் எரிப்பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றை கையாள முடியும். அதோடு இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் முன்னணி துறைமுகமாக புதிய மங்களூர் மாற்றமடையும்.
சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு
மீன்பிடி துறைமுக பகுதியான குலாயில் ரூ.396 கோடி மதிப்பீட்டில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு, சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் கீழ் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
கடல்நீர் சுத்திகரிப்பு
இதற்காக ரூ.1,829 கோடி செலவில் 10 பிபிஎம் என்ற குறைந்த அளவில் சல்பர் பயன்பாட்டில் எரிபொருட்கள் உற்பத்தி மையம் அர்ப்பணிக்கப்பட்டது. அதோடு ரூ.677 கோடி மதிப்பீட்டில் ஒரு நாளைக்கு 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றும் ஆலைகள் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.