எடியூரப்பா பதவிக்கு ஆபத்து.. பரபரப்பில் கர்நாடக அரசியல்
பெங்களூர்: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் பதவி பறிபோக போகிறது என்று, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக வந்தபோதிலும், ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.
பிற கட்சி எம்எல்ஏக்கள் இழுத்து வந்து, ஆட்சி அமைப்பதில் எடியூரப்பா தோல்வியடைந்துவிட்டதாக பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
எந்த விதிமீறலும் இல்லை.. பிரதமர் மோடியை மேலும் 2 புகாரில் இருந்து விடுவித்தது.. தேர்தல் ஆணையம்
கூட்டணி அரசு
இந்த நிலையில், லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதன் காரணமாக 28 லோக்சபா தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில், பாஜக எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 14 தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் நிலைமையில் பாஜக உள்ளது.
பேலூர் கோபாலகிருஷ்ணா பேட்டி
இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் சீனியர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பேலூர் கோபாலகிருஷ்ணா அளித்த ஒரு பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் கூறுகையில், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும் பாஜக தலைமை, எடியூரப்பாவை ஓரங்கட்டி விடும். முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா இதை ஏற்கனவே மறைமுகமாக தெரிவித்து விட்டார்.
எடியூரப்பா பதவி
பாஜக தேசியத் தலைவருடன் நல்ல உறவில் இருக்கும், அக்கட்சியின் தேசிய இணைச் செயலாளர், சந்தோஷ், கர்நாடக பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இவ்வாறு பேலூர் கோபாலகிருஷ்ணா தெரிவித்தார். இதனிடையே எடியூரப்பாவின் பாஜக தலைவர் பதவிக்கு கட்சிக்குள்ளேயே போட்டி உருவாகியுள்ளது.
போட்டி அதிகம்
வட கர்நாடகாவில் பீஜாப்பூர் நகரை சேர்ந்த பாஜக எம்எல்ஏவான பசனகவுடா பாட்டீல் யத்னால், அளித்த பேட்டியில், வட கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை கர்நாடக பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாஜகவுக்கு வட கர்நாடகாவில் தான் செல்வாக்கு அதிகம். எனவே இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும், என்று தெரிவித்தார். அவர் தன்னைத்தான் தலைவராக்க வேண்டும் என்பதை இப்படி மறைமுகமாக சொல்லியுள்ளார். எனவே, லோக்சபா தேர்தல் முடிவுகள் எடியூரப்பாவுக்கு அக்னி பரிட்சையாக மாறும் என்று கூறப்படுகிறது.