பஜ்ரங்தள் தொண்டர் கொலை.. 3 பேரை கைது செய்த போலீஸ்.. கர்நாடகாவில் தணியுமா பதற்றம்?
பெங்களூர்: பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஷிமோகா நகரில் பஜ்ரங் தள் எனும் இந்துத்துவா அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (வயது 23) மர்ம நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
வீடு முழுவதும் விஷவாயு.. கேப்புகளில் வெளியேறாமல் இருக்க செல்லோடேப்! ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
இதனைக் கண்டித்து ஷிமோகாவில் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஷிமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதற்றம்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஹிஜாப் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அவரது கருத்துகள்தான் முஸ்லிம் குண்டர்களை தூண்டிவிட்டது என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார். இந்த கருத்தும் இப்போது சர்ச்சையாகி உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ஹிஜாப் விவகாரத்துக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஞானேந்திரா
பஜ்ரங்தள செயற்பாட்டாளர் ஹர்ஷா கொலை வழக்கு குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, இந்த வழக்கில் இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 5 பேர் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும் ஆனால் அவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் ஞானேந்திரா கூறினார்.
வன்முறை
பஜ்ரங் தள் செயற்பாட்டாளர் ஹர்ஷாவின் கொலையைக் கருத்தில் கொண்டு வன்முறை வெடித்தது. அரக ஞானேந்திரா மேலும் கூறுகையில் "ஷிமோகா நகர் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்; 2-3 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும்'' என்றும் தெரிவித்தார்.
கண்டிப்பு
பஜ்ரங்தள் செயற்பாட்டாளர் ஹர்ஷாவின் கொலை குறித்து பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா கூறுகையில் "இன்று ஹர்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் கண்டிப்புடன் செயல்படும் என்று கூறுகிறது, நமது காரியகர்த்தாக்கள் அவர்களை நம்புவார்களா.. நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் எப்போது கண்டிப்புடன் செயல்படுவீர்கள். அரசு கண்டிப்புடன் செயல்பட்டிருந்தால் இன்று இப்படி நடந்திருக்குமா, இன்றும் காங்கிரசையும், SDPI யையும் குறை கூறாதீர்கள்.
விசாரணை
நமது தொண்டர்கள் ஏன் உழைத்து எங்களுக்கு ஆட்சியைக் கொடுத்தார்கள். கொலையாவதற்காகவா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். பஜ்ரங்தள் செயல்பாட்டாளர் ஹர்ஷா மரணம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கடிதம் எழுதியுள்ளார்.