பெங்களூர் 2வது விமான நிலையம் எங்கு அமைகிறது.. விமான ஆணைய அறிக்கை குறித்த முக்கிய அப்டேட்
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியை கர்நாடகா அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்திய விமான ஆணையம் வழங்கும் என கர்நாடகா தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் கூறியுள்ளார். அதேபோல் விமான நிலையம் அமைக்க தேர்வாகி உள்ள இடங்கள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா- தமிழ்நாடு எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் அதன் அருகே உள்ள பெங்களூரில் முதலீடுகள் குறையலாம். அதேபோல் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடியால் பல நிறுவனங்கள் ஓசூருக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. இது கர்நாடகாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசும் திட்டமிட்டு வருகிறது.
பெங்களூரில் ஏற்கனவே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ள நிலையில் புதிதாக 2வது விமான நிலையம் அமைப்பதில் கர்நாடகா அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பான அறிக்கையை இந்திய விமான ஆணையத்திடம் வழங்கப்பட உள்ளதாக கர்நாடகா தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் கூறியுள்ளார். இதுபற்றி எம்பி பாட்டீல் கூறியுள்ளதாவது:
‛‛பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை இந்திய விமான ஆணையத்தின் நிபுணர் குழு கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தது. இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை கர்நாடகா அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்திய விமான ஆணையத்திடம் இருந்து அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு நவி மும்பை மற்றும் நொய்டா விமான நிலையங்களை கட்டமைத்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அவர்கள் விமான நிலையம் கட்டமைப்பதற்கான பொருளாதாரங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
அரசு வழங்கும் நிலத்தில் விமான நிலையம் அமையும் என் கூற முடியாது. ஏனென்றால் நாங்கள் முதற்கட்ட பணிகளை தான் தொடங்கி உள்ளோம். தற்போது பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி 150 கிலோமீட்டர் தூரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தடை உள்ளது. இதனால் அந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து இடம் தேர்வு செய்வோம். பதிய விமான நிலையத்தை கட்ட 5 முதல் 6 ஆண்டுகள் தேவைப்படும். இதனால் 2033ம் ஆண்டுக்குள் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்''என்றார்.
பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு மொத்தம் 3 இடங்களை இறுதி செய்துள்ளது. ஒன்று கனகபுரா ரோட்டின் அருகே ககலிபுரா. 2வது இடம் என்பது ஹாரோஹள்ளி. 3வது இடம் என்பது நெமலங்களா - குனிகல் ரோட்டில் உள்ள சிக்கசோலூர் என்பதாகும். இந்த இடங்களை கர்நாடகா அரசு தேர்வு செய்திருந்தாலும் கூட எம்எல்ஏக்களிடம் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. இதனால் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இறுதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் எம்பி பாட்டீல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications