"மோடி கூட்டத்திற்கு வந்தால் ரூ.500" அழைத்து வந்து பாஜக ஏமாற்றியதாக புகார்.. மக்கள் போராட்டம்!
பெங்களூரு: பிரதமர் மோடி உரையாற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றால் ரூ.500 தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.100 மட்டுமே பாஜகவினர் கொடுத்துள்ளனர். இதனை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பெங்களூர் வந்தார். பின்னர் பெங்களுரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கர்நாடகா வந்த மோடி
பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டு ஒன்றுக்கு 2 முதல் 5 கோடி பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய முனையம் மூலம் 5 முதல் 6 கோடி பயணிகள் பயனடைவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
கெம்பே கவுடா சிலை திறப்பு
இதுமட்டுமல்லாமல் பெங்களூர் நகரத்தை உருவாக்கிய மாமன்னர் கெம்பே கவுடாவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அவரது 108 அடி உயர சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் ஆகியவற்றை பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உற்சாக வரவேற்பு
இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று நீண்ட உரையாற்றினார். இதில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த பகுதிகளின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிகளவில் கூடிய மக்கள்
குறிப்பாக நிகழ்ச்சிகள் முடிந்து சிட்டி ரயில் நிலையம் முன்பு உள்ள சர்க்கிளில் ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கி தொண்டர்களின் அருகில் சென்று உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது தொண்டர்கள், 'மோடி... மோடி...' என்று கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
ரூ.500 கொடுப்பதாக புகார்
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்த சில தொழிலாளர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு கூட்டத்தில் இருந்ததற்காக பாஜக நிர்வாகிகளிடம் ரூ.500 கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்தில் பங்கேற்றால் ரூ.500 பணம் கொடுப்பதாக உறுதியளித்து பாஜகவினர் தொழிலாளர்களை அழைத்து சென்றுள்ளனர்.
தொழிலாளர்கள் போராட்டம்
ஆனால் பிரதமர் மோடி கூட்டம் முடிவடைந்த பின்னர், தொழிலாளர்களுக்கு ரூ.100 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் பாஜகவினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.