1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்
பெங்களூர்: கர்நாடகாவிற்கு ஆகஸ்ட் மாதம் 1 கோடி தடுப்பூசி ஒதுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பிஎஸ் எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பாஜக சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மை, புதன்கிழமை முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து அவர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
வெள்ளிக்கிழமை, கர்நாடக முதல்வர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு
மத்திய அமைச்சருடன் சந்திப்பு
டெல்லி பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பொம்மை நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரையும், சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜ்காட்டிற்கும் சென்றார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடமான சடைவ் அடலிலும் அவர் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பசவராஜ் பொம்மை.
கூடுதல் தடுப்பூசி
அப்போது அவர் கூறியதாவது: நான் கர்நாடக மாநிலத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்தேன். இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஏற்றுக் கொண்டார். உதவுவதாக உறுதியளித்துள்ளார்.
1 கோடி தடுப்பூசி
தற்போது, 63-64 லட்சம் டோஸ்கள் கர்நாடகாவிற்கு மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. மாநிலத்திற்கு அதிக அளவு தடுப்பூசி தேவைப்படுகிறது. எனவே நான் மாதந்தோறும் 1.5 கோடி தடுப்பூசி டோஸ் வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். 1.5 கோடி டோஸ் ஒதுக்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு 1 கோடி டோஸை வழங்க முயற்சிப்பதாகவும், அடுத்த மாதங்களில் விநியோகத்தை அதிகரிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு நாளுக்கு 4 லட்சம் தடுப்பூசி
கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லட்சம் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே சுமார் 1 கோடி டோஸ் வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன். கர்நாடகாவிற்கு கொரோனா அவசர நிதியிலிருந்து ரூ. 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ .23,000 கோடி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
மாநில சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளதால், வரும் நாட்களில் மத்திய சுகாதார அமைச்சர் மேலும் கூடுதல் நிதியை ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளார்.
கேரள எல்லை மாவட்டங்கள்
கேரளா எல்லையில் உள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து மாண்டவியாவிற்கு அலர்ட் செய்துள்ளேன்.
கேரள எல்லையிலுள்ள மாவட்டங்களில், சோதனை மற்றும் தடுப்பூசியை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்குத் திரும்பிய பிறகு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன் எல்லை மாவட்டங்களில் உள்ள கொரோனா நிலைமையை பரிசீலனை செய்ய உள்ளேன். மாநிலத்தின் வெள்ள நிலைமையையும் ஆய்வு செய்வேன்.
Recommended Video
தீவிர பரிசோதனை
எல்லையோர மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ரயில் பயணிகள் மற்றும் சாலை வழிகளில் பயணம் செய்பவர்களுக்கு உரிய பரிசோதனை செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.