‛இதுதான் குட்டி பாகிஸ்தான்’... ரம்ஜான் நாளில் கோஷமிட்ட இருவர் கைது... கர்நாடக போலீசார் அதிரடி
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக கூடியிருந்த வேளையில் ‛இது மினி பாகிஸ்தான்' என கோஷமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடகத்திலும் கொண்டாட்டம்
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலும் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள காவலண்டே கிராமத்திலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் கொண்டாடினர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

மினி பாகிஸ்தான் கோஷம்
அதில் ரம்ஜான் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் சாலையில் நின்று ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் ‛காவலண்டே சோட்டோ பாகிஸ்தான்' (காவலண்டே மினி பாகிஸ்தான்) எனக்கூறும் சத்தமும் கேட்டது. முஸ்லிம் மக்கள் அதிகம் திரண்டிருந்த நிலையில் காவலண்டே கிராமத்தை இப்படி கூறியிருந்தனர்.

விசாரிக்க உத்தரவு
இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். கவலந்து குட்டி பாகிஸ்தான் எனக்கூறிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இத்தகைய நபர்களை கைது செய்யாவிட்டால் பிரிவினைவாதம் அதிகரிக்கும் என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இதுபற்றி நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‛விசாரணை நடத்தும்படி எஸ்பிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

2 பேர் கைது
இந்நிலையில் கோஷமிட்ட இருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களின் பெயர் பயாஸ் ஷெரிப், ஹனன் அலி என்பது தெரியவந்தது. இவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில் கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications