ஜனநாயகத்திற்கு எதிரானது.. எடியூரப்பா பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் காங்., மஜத தலைவர்கள்
பெங்களூர்: எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்குமாறு கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டு ராவ் தனது கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"குதிரை வியாபாரம் மற்றும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பிற்கு முரணாக, நெறிமுறையற்ற பதவியேற்பு விழா இது" என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
"இந்த புனிதமற்ற நிகழ்வில் நான் பங்கேற்க மாட்டேன். மேலும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
"ஊழல் சின்னம், மற்றும் முன்னாள் சிறை பறவை எடியூரப்பா, தனது சிறந்த குதிரை வியாபார திறனை பயன்படுத்தி, ஜனநாயகத்தைத் தகர்த்து ஆட்சிக்கு வர பயன்படுத்தினார், " என்று கர்நாடக மாநில காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.
"கர்நாடக மக்கள் 2008-11 க்கு இடையில் அவர் முதல்வராக இருந்த பேரழிவுகரமான பதவிகாலத்தை இப்போதும் நினைவில் கொள்கிறார்கள். சிறையில் எடியூரப்பா அடைபட்டதுடன் அந்த ஆட்சி முடிந்தது," என்று காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களை வெளியே விட்டால் கதை முடிந்தது.. மும்பை ஹோட்டலில் குவியும் பாஜகவினர்.. ஆள் அனுப்பிய அமித் ஷா!
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவருமான சித்தராமையா, கர்நாடகா "பாஜகவின் சோதனைக் கூடமாக" மாறியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
எடியூரப்பா பதவியேற்பு விழாவில் பங்கேற்க கூடாது என்ற முடிவில்தான், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மஜத கட்சி வெளியிட்ட ட்வீட்டில், இன்று கர்நாடக வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். பாஜகவின் அரசியலமைப்பற்ற நடைமுறைகளால் ஜனநாயகம் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.