காங்கிரஸ் VS பாஜக + ஜேடிஎஸ்.. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெல்வது யார்? சி வோட்டர் சர்வே முடிவு
பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியில் அதிக தொகுதிகளை வெல்ல முடியாது எனவும், மாறாக பாஜக + ஜேடிஎஸ் கட்சி தான் அசத்தல் வெற்றி பெறும் எனவும் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கு கர்நாடகாவில் பிரதான கட்சிகளாக உள்ள காங்கிரஸ், பாஜக, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) ஜேடிஎஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்விக்கு காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் வகையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
முதற்கட்டமாக காங்கிரஸ் சார்பில் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாஜக சார்பில் 20 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்க ஹாவேரி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு முன்பே பிற மாநிலங்களை போல் கர்நாடகாவிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ், காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும், மண்டியாவில் சுயேச்சையாக மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இந்நிலையில் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேடிஎஸ் அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை கூடதலாக 4 தொகதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட ஆளும் கட்சியாக இருந்து பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும் கூட பாஜக + ஜேடிஎஸ் கூட்டணியை விட காங்கிரஸால் அதிக இடங்களை வெல்ல முடியாது என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications