சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா
பெங்களூர்: சித்தராமையாவின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றும் சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி காங்கிரஸுடன் கூட்டணி என்றும் முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் 14 மாதங்களுக்கு முன்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமைச்சர் பதவி, அதிகார போட்டி ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எடியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.
பின்னணியில் சித்தராமையா
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததன் பின்னணியில் சித்தராமையா இருந்தார் என தேவகௌடாவும் குமாரசாமியும் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார்.
காரணம் என்ன
அப்போது அவர் கூறுகையில் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு காரணம் நான் தான் காரணம் என குமாரசாமியும் தேவகௌடாவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதிலிருந்து கௌடா குடும்பத்துக்கே என்னை பிடிக்கவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.
குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்
அரசியல் ரீதியில் என்னை அழிக்க பார்க்கின்றனர். காங்கிரஸில் இருந்து என்னை வெளியேற்ற முடியும் என நினைக்கின்றனர். இதுபோன்ற தந்திரங்கள் கௌடாவுக்கு நன்றாகவே தெரியும். குமாரசாமிக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காகவே கௌடா குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
அரசு கவிழ்ந்தது என்னால் அல்ல
தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள கௌடா எதை வேண்டுமானாலும் செய்வார். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். காங்கிரஸ்- ஜேடிஸ் கூட்டணி கவிழ்ந்தது என்னால் அல்ல.
கௌடா சுவாமி தரிசனம்
இதற்கு முழுக்க முழுக்க தேவகௌடாவே காரணம் என சித்தராமையா குற்றம்சாட்டினார். ஹசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள ரங்கநாதா கோயில், லட்சுமி நரசிம்மசாமி கோயில்களில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
5 முறை எம்எல்ஏ
அப்போது சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில் சித்தராமையாவின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அவருடைய கருத்துக்கு காலம்தான் பதில் சொல்லும். ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த எச் கே குமாரசாமி 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கூட்டணி ஆட்சியில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. எடியூரப்பாவின் ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்கலாம்.
ஜேடிஎஸ்
இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனை எதிர்கொள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தயாராக உள்ளது. மாநில மக்கள் எப்போதும் என்னையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வேன் என்று கூறியுள்ளார். சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்றார் தேவகௌடா.