பரபரப்பு.. புனித் ராஜ்குமார் மரணத்திற்கு காரணம் இதுவா? கர்நாடக அமைச்சர் ஏன் இப்படி சொல்கிறார்?
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்முக்கு சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கர்நாடக சுகாதார அமைச்சர், சுதாகர், ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜிம்மிலிருந்து நேராக விக்ரம் மருத்துவமனைக்கு புனித் ராஜ்குமார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், புனித் ராஜ்குமார் உயிரை காப்பாற்ற முடியவில்லை. எனவே உடற்பயிற்சிதான் புனித் ராஜ்குமார் உயிரை பறித்ததாக வதந்திகள் பரவிய நிலையில், கர்நாடக அமைச்சர் கூறிய கருத்தும் அதனுடன் இணைந்து போகிறது.

கர்நாடக அமைச்சர்
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், ஜிம்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு விரைவில் வெளியிடும் என்றும், ஜிம்முக்குள், என்னென்ன உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பது அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றும், இதய பாதிப்பு தொடர்பான அவசரநிலைகள் ஏற்படும் போதெல்லாம் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜிம் போக பயம்
புனித் இறந்ததைத் தொடர்ந்து, அதிகப்படியான உடற்பயிற்சி மேற்கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யலாமா வேண்டாமா என்று பலர் தன்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்
இப்படி ஓரிரு சம்பவங்களைப் பார்த்துவிட்டு ஜிம்முக்கு போவதை தவிர்ப்பது சரியல்ல. மாநிலத்தில் உள்ள ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டுதல்களில் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அவை இருக்கும். மேலும், இதுபோன்ற அவசரநிலை ஏற்படும் போது, குறைந்தபட்சம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, எப்படி முதலுதவி வழங்குவது என்பது குறித்து அனைத்து ஜிம் பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று சுதாகர் தெரிவித்தார்.

ஜிம் சம்பவம்
சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் நகரில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்த ஒரு வாலிபர் மாரடைப்பு காரணமாக நெஞ்சை பிடித்துக்கொண்டு அமரும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நலம் தேறினார் என்று பிறகு செய்திகள் உறுதிப்படுத்தின. இதுபோன்ற சம்பவங்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல மக்களிடையே பயத்தை ஏற்படுத்திய நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

குடும்ப டாக்டர் கருத்து
இருப்பினும், புனித் ராஜ்குமாரின் மருத்துவரான டாக்டர் ரமணா ராவ், புனித் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்பு அவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றதாகவும், அப்போது ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததாகவும்தான் தெரிவித்துள்ளார். புனித் மரணத்திற்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு டாக்டர் ரமண ராவ் அளித்த பதிலில், புனித் ராஜ்குமாருக்கு இதயக் கோளாறுகள் இருந்தது இல்லை. அதற்காக அவர் மருந்துகள் எடுத்ததும் இல்லை. அதிகப்படியான உடற்பயிற்சி கரோனரி தமனியில் சிதைவை ஏற்படுத்தும். ஆனால் புனித் விஷயத்தில் அது உண்மையல்ல. புனித் ராஜ்குமார் பல ஆண்டுகளாக இதேபோன்று உடற்பயிற்சி செய்து வந்தார். சம்பவ நாளில் அளவுக்கு அதிகமாக அவர் உடற்பயிற்சி செய்யவில்லை. இவ்வாறு ரமண ராவ் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications