ஹிஜாப்புக்கு அனுமதி கோரி கர்நாடகாவில் இன்று பந்த்! கடைகள் அடைப்பு... போலீஸ் குவிப்பு
பெங்களூர்: ஹிஜாப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகத்தில் இன்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பந்த்(முழுஅடைப்பு) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பெங்களூர், மங்களூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பு
தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையல் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

பந்த் அறிவிப்பு
இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் தீவிர ஆலோசனை நடத்தினர். ஹிஜாப்புக்கு அனுமதிகோரி இன்று பந்த் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதுதொடர்பாக அமீர் இ ஷரியத் அமைப்பின் தலைவரான இஸ்லாமிய மதகுருவான மவுலானா ஷாகீர் அகமது கான் ரஷதி அழைப்பு விடுத்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஹிஜாப் அணிந்து கல்வி கற்க முடியும் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும். கடைகளை கட்டாயப்படுத்தி அடைக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடக்கூடாது'' என கூறியிருந்தார்.

கடைகள் அடைப்பு
இந்த பந்த் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ, சிஎப்ஐ உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பெங்களூர், தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர்,தார்வார் மாவட்டம் உப்பள்ளி, உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் உள்பட மாநிலத்தின் சில இடங்களில் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆர்ப்பாட்டத்துக்கு வாய்ப்பு
பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு ஊர்வலம், போராட்டம் நடத்த அனுமதியில்லை. இதனால் மாநிலத்தின் பிற இடங்களில் மக்கள் ஒன்றாக கூடி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக ரிசர்வ் படை போலீசார், மாவட்ட ஆயுத படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications