பெங்களூரில் வேகமெடுத்த காலரா.. 50 சதவீதம் வரை அதிகரித்த பாதிப்பு.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பெங்களூர்: பெங்களூரின் பல இடங்களில் வெயில் அதிகரித்து தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனைக்கு நடுவே தான் காலரா வேகமாக பரவி வருகிறது. ஏப்ரல் மாதம் இப்போது தொடங்கி உள்ள நிலையில் காலரா பாதிப்பு என்பது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெங்களூர் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பெங்களூரில் தற்போது பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. பருவமழை பொய்த்து போனதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே போர்வெல்களில் தண்ணீர் வற்றி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனை இன்னும் முழுவதுமாக தீர்க்கப்படாத நிலையில் தான் பெங்களூர் மக்கள் அடுத்த பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர்.

அதாவது பெங்களூரில் காலரா நோய் பரவ தொடங்கி உள்ளது. பொதுவாக காலரா என்பது மழைக்காலத்தில் பரவும். ஆனால் இப்போது கோடை வெயில் வெளுத்து வாங்கும் சூழலில் பெங்களூரில் காலரா பரவல் அதிகரித்துள்ளது.
பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் ஒருவருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல தனியார் மருத்துவமனைகளில் காலராவுக்கு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ஒரு மாதத்தில் ஒன்று அல்லது 2 பேருக்கு காலரா பாதிப்பு கண்டறியப்படும். ஆனால் மார்ச் மாதத்தில் காலரா பாதிப்போரின் எண்ணிக்கை என்பது 6 முதல் 7 என்ற அளவில் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதுபற்றி பெங்களூர் ஸ்பர்ஷ் மருத்துவமனையின் இரைப்பை குடலியல் நிபுணர் ஸ்ரீஹரி கூறுகையில், ‛‛பெங்களூரில் சமீப நாட்களாக காலராவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 20 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சுகாதார குறைபாடு மற்றும் தூய்மையற்ற தண்ணீரை பருகுவது தான் முதன்மை காரணமாகும்'' என்றார்.
மேலும் பொதுவாக காலரா என்பது 'விப்ரியோ காலரே' என்ற பாக்டீரியாவால் தான் பரவுகிறது. சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை உண்பதன் மூலம் இந்த பாக்டீரியா மனிதர்களுக்கு காலராவை பரப்பும். தற்போது பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதனை சரிசெய்ய டேங்கர்கள் மூலம் பல இடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீரால் கூட காலரா பரவல் அதிகரித்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் பெங்களூர் மாநகராட்சி காலரா தடுப்பு குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் கூறுகையில், ‛‛பெங்களூர் மல்லேஸ்வரத்தில் ஒருவருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் காலரா பாதிப்பு என்பது இன்னும் அதிகரிக்கவில்லை. ஆனாலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் காலரா பரவும் நிலையில் பொதுமக்கள் சுத்தமான உணவு மற்றும் குடிநீரை பயன்படுத்த வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து பருகுவது நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதும் அவசியாகும்.












Click it and Unblock the Notifications