நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ
பெங்களூர்: சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள ஹெச்டி கேமராவால் நிலவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் 'இஸ்ரோ' சார்பில், ஜூலை, 22ல், சந்திரயான் - 2 விண்கலம் ஏவப்பட்டது. ஆனால், 'விக்ரம் லேண்டர்' கருவி, செப்டம்பர் 7ல், நிலவை நெருங்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, லேண்டர் கருவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இருப்பினும் நிலவை சுற்றி வரும் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விண்கலத்திலுள்ள ஹெச்டி கேமரா மூலம், நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான போட்டோக்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
இவை, 100 கி.மீ. உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களாகும். 4 கி.மீ. நீளம், 3 கி.மீ. விட்டம் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி இந்த போட்டோவில், பதிவாகியுள்ளது . இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது.
நிலவு ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களை அடையாளப்படுத்தி கொள்ள வானியல் விஞ்ஞானிகள் பெயர்களை சூட்டுவது வழக்கம். அந்த வரிசையில், சந்திரயான்-2 விண்கலம் எடுத்த புகைப்படத்தில் உள்ள பள்ளம், ஜெர்மனி, வானியல் அறிஞர் பலோன் எச் லட்விக் வான் போகஸ்லாவ்ஸ்கியின் பெயரால் அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#ISRO
— ISRO (@isro) 4 October 2019
Have a look at the images taken by #Chandrayaan2's Orbiter High Resolution Camera (OHRC).
For more images please visit https://t.co/YBjRO1kTcL pic.twitter.com/K4INnWKbaM
இஸ்ரோ நேற்று வெளியிட்ட ஒரு தகவலில், நிலவின் தரை பகுதியில், மின்காந்த துகள்கள் இருப்பதை, விண்கலம் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.