ஜெயலலிதாவின் 27½ கிலோ தங்கம், வெள்ளி நகைகள்.. தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
பெங்களூர்: நகைகளை மதிப்பீடு செய்யும் பணி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 2வது நாளாக இன்றும் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் கொண்டுவந்திருந்த பெட்டியில் வைத்து நகைகள் சீலிடப்பட்டது. தமிழக உள்துறை இணை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் நகைகளை பெற்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதான நிலையில் 1996இல் அவரது வைரம், தங்க, வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்கள், சொத்துக்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசிடம் அனைத்து பொருட்களையும் வழங்க கர்நாடக கோர்ட் உத்தரவிட்ட நிலையில் நகைகள் இன்று முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991- 1996 ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட நகைகள், ஆவணங்கள் 2004 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசிடம் உள்ள அவருடைய 27.5 கிலோ தங்க - வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஒப்படைக்க உத்தரவிட்டது. எனினும், சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்துதான், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளை பிப்ரவரி 14, 15 ஆம் தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை ஒப்படைக்க பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று கூடியது. தமிழக அரசின் உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு விமலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.
இதையடுத்து, ஜெயலலிதா சொத்துக்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியது. மொத்தம் 481 வகையான நகைகள் உள்ளன. இந்த நகைகளில் 150 நகைகள் எடை, தங்கம், வைர நகைகள்தானா என சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி வரை மதிப்பீட்டு பணி நடைபெற்றது. ஜெயலலிதாவின் நகைகளில் 290 நகைகள் எடை அளவு மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள நகைகளின் மதிப்பீட்டு பணிகள் இன்று நடந்தது.
இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் கொண்டுவந்திருந்த பெட்டியில் வைத்து நகைகள் சீலிடப்பட்டது. தமிழக உள்துறை இணை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் நகைகளை பெற்றனர்.












Click it and Unblock the Notifications