எடியூரப்பானா பயம்! நெருங்கும் தேர்தல்..நடுங்கும் பொம்மை! காங்கிரஸைவிட கர்நாடக பாஜக அஞ்சும் தனிஒருவன்
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநில பாஜக நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் காங்கிரஸைவிட பெரிய எதிரியை அக்கட்சி சம்பாதித்து இருக்கிறது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. இதற்கு முன்பாகவே அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜகவும் பல்வேறு திட்டங்களை கையில் எடுத்து உள்ளது.

சங்கல்ப் யாத்திரை
அந்த வகையில், பாஜக சார்பில் கர்நாடகாவில் சங்கல்ப் என்ற யாத்திரையை நடத்த உள்ளது. கர்நாடக மக்களிடம் அதரவை பெறவும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டத்தை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. பாஜக மாநில நிர்வாகத்திற்கும் தொடர்ந்து உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில் இந்த யாத்திரை ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

எடியூரப்பா பெயர் எங்கே?
நிலைமை இப்படி இருக்க அந்த யாத்திரையாலேயே கர்நாடக பாஜகவிற்குள் இருக்கும் விரிசலும், பூசலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த சங்கல்ப் யாத்திரை குறித்த மாநில பாஜகவின் அறிவிப்பில் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான எடியூரப்பாவின் பெயர் இடம்பெறாததுதான்.

எடியூரப்பாவுக்கு எதிராக மாநில பாஜக
கர்நாடகாவில் அதிகளவில் வசித்து வரும் லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவரான எடியூரப்பா, குமரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களிலேயே எடியூரப்பாவுக்கு எதிராக அம்மாநில அமைச்சர்கள், மூத்த பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

லிங்காயத்து எதிர்ப்பு
இதனால் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில், பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சியின் கீழ் லிங்காயத்து மடத்தின் சாமியார்கள் கைது செய்யப்பட்டது போன்றவற்றால் அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சங்கல்ப் யாத்திரையில் அவரது பெயர் இடம்பெறாதது கூடுதல் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

தேர்தல் நேரத்தில் குழப்பம்
தற்போது பாஜகவின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராகவும், தேர்தல் குழு உறுப்பினராகவும் இருக்கும் எடியூரப்பா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவர் பெயரை குறிப்பிடாததன் மூலம் அவரை மாநில பாஜக புறக்கணிக்கிறதோ என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

எச்சரித்த எடியூரப்பா
அடுத்த தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் பசவராஜ் பொம்மை தவிர்த்து மேலும் இருவரது பெயர்களை கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் பேசிய எடியூரப்பா, அரசியலில் தன்னை யாரும் அழிக்கவோ, ஒதுக்கவோ முடியாது என்று அழுத்தமாக கூறினார். இது அக்கட்சி மாநில நிர்வாகத்துக்கே அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பேசப்படுகிறது.

தனிப்பெரும் தலைவர்
2013 சட்டசபைத் தேர்தலில் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சியை தொடங்கி போட்டியிட்ட எடியூரப்பா 9.5 சதவீத வாக்குகளை பெற்றார். இதனால் காங்கிரஸ் அம்மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. இந்த சூழலில் வலுவான வாக்கு வங்கியை தன் வசம் வைத்திருக்கும், பாஜகவில் தனிப்பெரு தலைவராக திகழும் எடியூரப்பாவின் நகர்வுகளை மாநில தலைமை உற்று நோக்கி வருகிறது.

அச்சத்தில் பொம்மை
குறிப்பாக கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதலமைச்சரான பிறகு ஏற்பட்ட ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி பிரச்சனைகள், மத வன்முறைகள், கலவரங்கள், அதனால் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் பொருளாதார சேதங்கள், பெரு வெள்ளம், ஊழல் புகார்களால் மக்கள் மத்தியில் அதிக அதிருப்தி இருப்பதாக கூறப்படும் சூழலில், காங்கிரஸ், ஜேடியூவை விட எடியூரப்பா மீதே பொம்மை மற்றும் மாநில பாஜக அஞ்சுவதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications