சபாநாயகர் மீது காகிதம் வீச்சு.. அரசு ஒப்பந்தத்தில் முஸ்லீம்களுக்கு 4% இடஒதுக்கீடு.. களேபரமான சட்டசபை
பெங்களூர்:அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடகா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் காங்கிரஸ் அரசு மனம் மாறவில்லை. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா அரசு சார்பில் தயாரிக்கப்பட்டது.
இந்த மசோதா இன்று கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினர் கோஷமிட்டனர். ஆனாலும் கூட பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்எல்ஏக்கள் உள்ளதால் அந்த மசோதா நிறைவேறியது.
இதனால் கோபமான பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர். அதோடு அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து பாஜகவினர் வீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்து இருக்கும் இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications