எதிர்க்கட்சிகள் ஆவேசம்.. பெரிய யூ டர்ன் போட்ட எடியூரப்பா.. சிறப்பு ரயிலுக்கு ஓகே
பெங்களூர்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது முடிவை மாற்றிக் கொண்டு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க சம்மதித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு ரயில்வே துறை, ரயில்களை இயக்கி உதவி வருகிறது. ரயில் புறப்படும் மாநிலம் மற்றும் சேரக்கூடிய மாநிலம் ஆகிய இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் மட்டுமே, சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குகிறது.
இப்படித்தான், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையம் வர தொடங்கினர். ஆனால் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழில்கள் துவங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான தொழில் தலைவர்கள் போன்றோரின் அமைப்பு பிரதிநிதிகள் எடியூரப்பாவை சந்தித்து, தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பினால், தொழிலை நடத்த முடியாது என்று ஆதங்கம் தெரிவித்தனர். இதையடுத்து திடீரென சிறப்பு ரயில்கள் ரத்து செய்யும் கோரிக்கையை எடியூரப்பா வைத்தார்.
இதனால், புலம் பெயர் தொழிலாளர்கள், நடை பயணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொத்தடிமைத்தனம் இருக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் செல்ல உரிமை கிடையாதா என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில்தான், எடியூரப்பா தனது முடிவிலிருந்து யூ டர்ன் போட்டுள்ளார். பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விரைவில் மீண்டும் இயக்கப்படும் என்று, கர்நாடக அரசு இன்று தெரிவித்துள்ளது. ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், பீகார், மணிப்பூர், திரிபுரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த மாநில அரசுகள் ஓகே சொன்னால் ரயில்கள் இயக்கப்படும் என்றும், கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.