இலவச அரிசி திட்டத்தை காலி செய்யும் மத்திய பாஜக அரசு-உடனே வீதியில் இறங்கியது கர்நாடகா காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்து வரும் 20-ந் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நியாய விலை கடைகளில் ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. கர்நாடகா தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மேலும் 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

கர்நாடகா தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி ரேஷனில் இலவசமாக 10 கிலோ அரிசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை ஏற்ற மத்திய அரசு கர்நாடகாவுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் திடீரென மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்துவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழே இல்லாத, பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கக் கூடிய தமிழ்நாடு, கர்நாடகா,மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்கள் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடும் என்கிற அச்சம் உள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் இலவச அரிசி திட்டம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவுக்கு அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றன.
மத்திய பாஜக அரசின் இம்முடிவால் கர்நாடகா காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, தெலுங்கானா மாநில அரசுகளுடன் பேசி கூடுதல் அரிசி பெறுவதற்கான முயற்சிகளையும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் சித்தராமையா இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த மாற்றாந்தாய் கொள்கையைக் கண்டித்து கர்நாடகா மாநிலம் முழுவதும் வரும் 20-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications