எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது-சு.சுவாமி ஸ்டிராங் ஆதரவு
பெங்களூரு: கர்நாடகாவில் தற்போதைய முதல்வர் எடியூரப்பா இல்லாமல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் 78 வயதாகும் முதல்வர் எடியூரப்பாவை மாற்றுவது என பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் உயர் பதவிகளில் 75 வயது வரை இருக்கலாம் என்கிற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதும் எடியூரப்பாவுக்கு விதிவிலக்கு கொடுத்து முதல்வராக்கியது பாஜக. தற்போது எடியூரப்பா மீது விமர்சனங்கள் சொந்த கட்சியிலேயே எழுவதால் அவரை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரையும் எடியூரப்பா சந்தித்துவிட்டு திரும்பினார்.
ஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு
ஒன்று திரண்ட லிங்காயத்துகள்
தற்போது எடியூரப்பாவுக்கு ஆதரவாக லிங்காயத்து சமூகத்தினர் ஒன்று திரண்டுள்ளனர். குறிப்பாக லிங்காயத் சமூக மடாதிபதிகள், முதல்வராக எடியூரப்பாவே நீடிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக எடியூரப்பாவை லிங்காயத் மடாதிபதிகள் நேற்று சந்தித்தும் ஆலோசனை நடத்தினர். ஒரு சில இடங்களில் எடியூரப்பாவுக்கு ஆதரவான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
எடியூரப்பா வேண்டுகோள்
காங்கிரஸ் கட்சியில் உள்ள 2 லிங்காயத் எம்.எல்.ஏக்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். லிங்காயத்துகளின் இத்தனை எதிர்ப்பும் எடியூரப்பாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் இதனை மறுக்கும் வகையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்; கட்சிதான் எனக்கு தாய். யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ட்விட்டரில் வேண்டுகோளும் விடுத்தார் எடியூரப்பா.
முடிவு என்ன?
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, வரும் 26-ந் தேதி தமது அரசு 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து கொடுக்கிறேன். அதற்குப் பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். பா.ஜ.க.வை மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்துவது என் கடமை. அனைத்து கட்சி தொண்டர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
எடியூரப்பாவுக்கு சு.சுவாமி ஆதரவு
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி, எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் முதன் முதலாக அமர்த்தியவர் எடியூரப்பா. இப்போது அவரை நீக்க சதிகள் நடக்கின்றன. எடியூரப்பா இல்லாவிட்டால் கர்நாடகாவில் பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படியான நிலையில் ஏன் மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டும்? என்று அழுத்தமாக ஆத்ரவு தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.