விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. "டான்ஸ்" ஆடியவர்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை.. கர்நாடகாவில் கொடுமை
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடனமாடிய இளைஞர்களை சிலர் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதூர்த்தி இந்தியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். எந்த அளவுக்கு இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறதோ, அதே அளவுக்கு வன்முறைச் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம். இந்த மாநிலம் அந்த மாநிலம் என எந்த வேறுபாடும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழும். விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பாடல்களை போடுவதில் ஏற்படும் தகராறு தொடங்கி, விநாயகர் சிலைகளை கரைக்கும் வரை அடிதடி சம்பவங்களும், தகராறுகளும் ஏற்படும். சில சமயங்களில் இந்த வன்முறைகள் கொலை வரை சென்றுவிடும். மத ரீதியான மோதல்கள் கூட பல பகுதிகளில் நடைபெற்றது உண்டு.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மஞ்ச்ஹல்லி கிராமத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க செல்வதற்கான ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டு சில இளைஞர்களாக உற்சாகமிகுதியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள், சற்று தள்ளி சென்று ஆடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த இளைஞர்கள் அதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த வெளியே வந்த சிலர், அங்கிருந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்து குண்டுக்கட்டாக வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டி அவர்களை பெல்ட் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்களுக்கு முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, அந்த இளைஞர்களின் நண்பர்கள் அவர்களை விட்டுவிடுமாறு கெஞ்சிநர். ஆனால், இன்று முழுவதும் அவர்களை வெளியே விட போவதில்லை என வீட்டின் உரிமையாளர்கள் கூறினர். இதகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு, கட்டிப் போடப்பட்டிருந்த இளைஞர்களை விடுவித்தனர். மேலும், அவர்களை கயிற்றால் கட்டி தாக்கிய நாகே கவுடா உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.