தமிழகத்துக்கு எப்படி நீர் கொடுக்கலாம்? எல்லா பந்த்துக்கும் பாஜக முழு ஆதரவு! பகீர் கிளப்பிய சிடி ரவி
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பெங்களூரில் பந்த் போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகா முழுவதும் வரும் 29 ம்தேதி பந்த் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் கொடுக்கலாம்? என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பிய தமிழக மாஜி பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, அனைத்து பந்துக்கும் பாஜக முழு ஆதரவு அளிக்கிறது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கிட்டு கொள்வதில் தொடர்ந்து பிரச்சனை உள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

இதனை நிறைவேற்ற உச்சநீதிமன்றமும் ஆர்டர் போட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் பந்த் நடத்தி வருகின்றனர். கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்து முடிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் உள்பட 100க்கும் அதிகமான அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பந்துக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் பந்த் நடத்தப்பட உள்ளது. வாகனங்கள் எதுவும் இயங்காத நிலையில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் முக்கிய இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்ததை நிறுத்த வேண்டும் எனவும், பெங்களூர் பந்த் மட்டுமின்றி தண்ணீர் விஷயம் தொடர்பாக நடத்தப்படும் போராட்டத்துக்கு பாஜகவின் முழு ஆதரவு உண்டு எனவும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கண்சிவக்க கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
3 மாதங்களுக்கு மட்டும் கேஆர்எஸ் அணையில் குடிநீருக்கான தண்ணீர் உள்ளது. மழைகாலம் என்பது மாநிலத்தில் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும்காலத்தில் மழை பெய்யும் என்பதற்கான அறிகுறியும் இல்லை. இத்தகைய சூழலில் முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவது என்பது மாநிலத்துக்கான துரதிர்ஷ்டம்.
இந்நிலையில் ஜனவரி மாதம் பெங்களூருக்கு குடிநீர் எங்கிருந்து தருவீர்கள்?. இந்த வருங்கால பிரச்சனையை சரிசெய்ய இப்போது இருந்தே சரிசெய்யும் நடவடிக்கையாக தமிழ்நாட்டுக்கு திறக்கும் தண்ணீரை உடனே நிறுத்துங்கள். மேலும் மழை பெய்து அணை நிரம்பிவிட்டால் அனைத்து மதகுகளையும் திறந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுங்கள். ஆனால் இப்போது குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது எப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க முடியும்?
அதனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் இன்று நடக்கும் விவசாயிகளின் பெங்களூர் பந்துக்கு பாஜக முழு ஆதரவு வழங்குகிறது. மாநிலத்தில் நிலம், நீர் உள்ளிட்ட உரிமைகளுக்காக யார் போராட்டம் நடத்தினாலும் பாஜக முழு ஆதரவை வழங்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications