கவுரி லங்கேஷ் கொலையாளிகளைத் தொடர்ந்து எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கிலும் 2 பேருக்கு ஜாமீன்!
பெங்களூர்: கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொலையாளிகள் 3 பேருக்கு அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதேபோல நாட்டையே அதிரவைத்த எழுத்தாளர் கல்புர்கி படுகொலை வழக்கில் கொலையாளிகள் 2 பேருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் கவுரி லங்கேஷ். 2017-ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் படுகொலை சம்பவத்தில் மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன் நாயக்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதே அடிப்படையில் இந்த படுகொலையில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த பின்னணியில் தற்போது நாட்டை உலுக்கிய எழுத்தாளர் கல்புர்கி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்டோர் கொலைகளில் ஒரே மாதிரியான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன; இந்துத்துவா தீவிரவாதிகளே இந்த கொலைகளைச் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கல்புர்கி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றமோ, கொலையாளிகள் 2 பேருமே கல்புர்கியை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரது வீட்டுக்குச் செல்லவில்லை என்பதால் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் கல்புர்கி வீட்டில் கொள்ளையடிக்கவே இருவரும் சென்றதாகவும் அப்போதுதான் அவரை சுட்டுக் கொன்றதாகவும் கொலையாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி உமா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications