"லிங்காயத்து மடம்.." பாஜக ஓட்டு வங்கியில் ஓட்டை போடும் ராகுல் காந்தி? பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் 2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்ற நிலையில் அவர் லிங்காயத் மடத்துக்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார். இந்த வேளையில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என சாமியார் ஒருவர் கூற மடாதிபதி இடைமறித்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் தென் இந்தியா உள்பட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலம் என்றால் அது கர்நாடகா தான்.
இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் பணிக்காக தனித்தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சித்தராமையாக பிறந்தநாள் விழா
இந்நிலையில் தான் முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு இன்று பிறந்தநாளாகும். அவர் இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்துக்கு பயணம் செய்தார்.

ராகுல்காந்தி கர்நாடகம் வருகை
அதன்படி நேற்று ராகுல் காந்தி விமானத்தில் கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். இரவில் அங்கு தங்கிய ராகுல்காந்தி இன்று தாவணகெரேயில் நடந்த சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதித்தார். அதன்பிறகு தாவணகெரேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.

மடத்துக்கு சென்ற ராகுல்
இந்த வேளையில் ராகுல்காந்தி சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீமுருகராஜேந்திர மடத்துக்கு சென்றார். அது லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மடமாகும். கர்நாடக மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களின் ஓட்டு என்பது பாஜகவின் பக்கம் தான் உள்ளது. இந்நிலையில் தான் ராகுல்காந்தி அந்த மடத்துக்கு சென்றார். அப்போது மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசிவமூர்த்தி முருக சரணாரு அவருக்கு இஷ்டலிங்கம் வழங்கி ஆசி செய்தார். மேலும், ‛‛எங்கள் மடத்துக்கு வருபவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்'' எனக்கூறினார். அதோடு பசவண்ணர் பற்றிய விஷயங்களை மடாதிபதியிடம் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

சாமியாரை தடுத்து நிறுத்திய மடாதிபதி
இந்த வேளையில் மடத்தின் கிளை மடமான ஹாவேரி ஒசமடத்தின் சாமியார் ஒருவர், ‛‛உங்களின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது ராகுல்காந்தியும் லிங்காயத் மடத்துக்கு வந்துள்ளார். இதனால் அவரும் பிரதமராக வருவார்'' என கூறினார். இந்த வேளையில் திடீரென்று குறுக்கீட்ட மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக சரணாரு, ‛‛இப்படி எல்லாம் பேசக்கூடாது. இதை கூறுவதற்கான இடம் இதுவல்ல. அதுபற்றி மக்கள் தான் முடிவு செய்வார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications