கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து! பள்ளிகளை திறக்கவும் அனுமதி.. பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் வரும் ஜன.31 முதல் நீக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் நாட்டில் பல முக்கிய நகரங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் வாரத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் தினசரி கேஸ்கள் 3 லட்சத்தைக் கூட தாண்டியது.
இதன் காரணமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மூச்சுமுட்டும் பெங்களூர்! காற்றின் தரம் மிக மோசம்.. தென் இந்திய நகரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்
கொரோனா பாதிப்பு
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 31,198ஆக உள்ளது. குறிப்பாகப் பெங்களூரில் மட்டும் தினசரி கேஸ்கள் 15,199ஆக உள்ளது. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 20%ஆக உள்ளது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் 4508 கேஸ்களுடன் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 24,418ஆக உள்ளது. தமிழ்நாட்டை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள போதிலும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 கீழ் உள்ளதால் கர்நாடக அரசு தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு வாபஸ்
ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய போது, இம்மாத தொடக்கத்தில் அங்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா குறைந்து வருவதால் அங்கு அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இரவு ஊரடங்கும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜன. 31, அதாவது திங்கள்கிழமை முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் கொரோனா 3ஆம் அலை காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளில் யாராவது ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட வகுப்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வரும் பிப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது போக்குவரத்து
அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை சுகாதார அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் பொதுமக்கள் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
திருமணங்கள்
மேலும் பப்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை 100 சதவீத வாட்டியைளர்களுடன் செயல்படலாம். திறந்த வெளியில் நடைபெறும் திருமணங்களுக்கு 300 பேரும், உள் அரங்குகளில் நடைபெறும் திருமணங்களில் 200 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் இனி 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்கள்
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் 50 சதவீதத்தில் திறக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் அனைத்து வகையான கண்காட்சிகள், பேரணிகள், போராட்டங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் மதக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் தடை தொடர்கிறது. அதேபோல தனியார் மருத்துவமனைகளில் 25% இடங்களை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.