கோவிலுக்குள் வராதீங்க.. கர்நாடகாவில் தலித் குடும்பத்திடம் தீண்டாமை.. வெளியான பூசாரியின் வீடியோ
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா நிட்டூர் கிராமத்தில் உள்ள முளுகாட்டம்மா கோவிலில் பூஜை செய்ய வந்த தலித் குடும்பத்தை பூசாரி வெளியே அனுப்பி தீண்டாமையை கடைப்பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது கூட சில இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமான விஷயமாகும். இதனை தடுக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்தாலும் கூட இன்னும் முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் தலித் குடும்பத்தை கோவிலுக்குள் நுழைய விடாமல் பூஜை செய்ய மறுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு:
ஏபிவிபி வைத்த தீ.. பற்றி எரிந்த கர்நாடகா! உடுப்பி டூ உச்சநீதிமன்றம் -ஹிஜாப் சர்ச்சை கடந்து வந்த பாதை
பூஜைக்காக கோவிலுக்கு சென்ற குடும்பம்
துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் நிட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முளுகாட்டம்மா கோவில் உள்ளது. இந்நிலையில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை, தேங்காயுடன் அவர்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது கோவிலில் இருந்த பூசாரி அவர்களை தடுத்து நிறுத்தினார்.
வெளியே போக கூறிய பூசாரி
மேலும் மாலை, தேங்காயை எடுத்து கொண்டு கோவிலை விட்டு வெளியே செல்ல கூறினார். அதோடு பூஜை செய்ய மறுத்தார். இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ‛‛கோவிலுக்குள் ஏன் வந்தீங்க.. வெளியே சென்று நில்லுங்க.. உங்களுக்கு பூஜை செய்து கொடுக்கிறேன்'' என கூறுகிறார். இதற்கு பூஜை செய்ய வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பூஜை செய்ய மாட்டேன் எனக்கூறி பூசாரி அங்கிருந்து வெளியேற்றுகிறார்.
சர்ச்சையான வீடியோ
இதுபற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் சசி என்பவர் கூறுகையில், ‛‛தலித் என்பதால் கோவில் பூசாரி பூஜை செய்ய மறுத்துவிட்டார். மேலும் அவர் சத்தமாக வெளியே போகும்படி கூறினார்'' என்றார். இதற்கிடையே பூசாரியை கோவிலைவிட்டு வெளியே செல்லும்படி கூறும் வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. தவறு செய்த பூசாி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
துவங்கிய விசாரணை
இதுபற்றி இன்னும் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இதுபற்றி தாசில்தார் ஆர்த்தி கூறுகையில், ‛‛இதுதொடர்பாக போலீசார் மற்றும் சமூக நலத்துறையுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது'' என்றார். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின்போது கோவிலில் அனைத்து தரப்பு அனுமதிக்கப்படுவார்கள். வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹள்ளியில் பூதம்மா கோவிலில் தலித் சிறுவன் ஒருவர் சாமி சிலையை தொட்டதாக கூறி அவனது குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. அதன்பிறகு யாதகிரி மாவட்டம் சுராப்புராவில் கேல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை சார்பில் சில நாட்களுக்கு முன்பு 500க்கும் அதிகமான தலித் மக்கள் இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை தழுவினார். மேலும் அவர்கள் சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசியது சர்ச்சையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.