KGF-2 பாடல் விவகாரம்:காங்.,ராகுல் யாத்திரை ட்விட்டர் கணக்குகளை முடக்க பெங்களூர் கோர்ட் அதிரடி ஆர்டர்
பெங்களூர்: கேஜிஎப் 2 (KGF-2) திரைப்படத்தின் இந்தி பாடல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் யாத்திரை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கி வைக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பாரத் ஜோடோ என்ற பெயரிலான இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கேஜிஎப்-2! ரியல் ராக்கி பாயாக மாறிய சிறுவன்! ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே மூச்சில் பிடித்ததால விபரீதம்
பெரும் வரவேற்பு
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை பொதுவாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் காங்கிரஸ் கட்சியினரிடையே புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, சமூக ஆர்வலர்களுடன் உரையாடுதல் என பல்வேறு யுக்திகளை ராகுல் காந்தி கடைபிடித்தும் வருகிறார்.
தெலுங்கானாவில் ராகுல்
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைக் கடந்து தற்போது தெலுங்கானாவில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற போது, கேஜிஎப் படத்தின் இந்தி பாடல்களை வைத்து காங்கிரஸ் கட்சி ஒரு வீடியோ வெளியிட்டது. இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
கேஜிஎப் பாடல்
கேஜிஎப் படத்தின் பாடல்களுக்கான காபிரைட்டைப் பெற்றிருப்பது பெங்களூரைச் சேர்ந்த எம்டிஆர் மியூசிக் நிறுவனம். தங்களது நிறுவனத்தின் அனுமதி மற்றும் ஒப்புதலைப் பெறாமல் கேஜிஎப் படப் பாடல்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியிருப்பதாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட 3 பேர் மீது புகார் தந்தது எம்டிஆர் மியூசிக் நிறுவனம்.
ட்விட்டருக்கு ஆர்டர்
இப்புகாரின் அடிப்படையில் காப்புரிமை மீறல் சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றம்சாட்டப்பட்டுள்ள 3-வது நபர் என சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்தது பெங்களூர் நீதிமன்றம்.
எம்டிஆர் மியூசிக் நிறுவனத்தின் புகாரை உறுதி செய்த பெங்களூர் நீதிமன்றம், ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கான அதிகாரப்பூர்வ கணக்குகள் ஆகியவற்றை ப்ளாக் செய்ய உத்தரவிட்டது பெங்களூர் நீதிமன்றம்.