5 சொகுசு கார், தங்க குவியல்.. ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த தாசில்தார்.. மிரண்ட போன பெங்களூரு போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் அஜித்குமார் ராய் என்ற தாசில்தார் ரூ.1,000 கோடி சொத்து குவித்து இருந்ததை கேட்டு பெங்களூர் நகரே ஆடி போயிருக்கிறது. அவரை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கர்நாடகாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு லோக் அயுக்தா என்ற அமைப்பு உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை போல் அதிரடியாக செயல்பட்டு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்நிலையில் லோக் அயுக்தா அமைப்புக்கு சில அரசு அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து புதன்கிழமை அன்று லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என மொத்தம் 62 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
மிக ரகசியமாக திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனையின் காரணமாக அதிகாரிகள் வசமாக சிக்கிக்கொண்டனர். பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து குவியல், குவியலாக தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அப்படி சிக்கிய அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
லோக் அயுக்தா போலீசாரின் சோதனையில் மொத்தம் 15 அரசு அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இதில் ஒரு அதிகாரியின் சொத்து மதிப்பை கேட்டு பெங்களூர் போலீசாரே ஆடிப்போனார்கள். யார் அவர், அப்படி என்ன சொத்து சேர்த்தார் என்பதை பார்ப்போம்.
பெங்களூர் கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராய் (வயது 42) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பணம், நகைகள், சொகுசு கார்கள், சொத்து ஆவணங்களை பார்த்து போலீசார் மிரண்டு போய்விட்டார்கள்.
அதாவது தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொந்தமான பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பசவேசுவராநகர், தொட்டபள்ளாப்பூர், கோலூர் உள்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை உள்ளார்கள்.
அப்போது தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது மேலும் பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் மட்டும் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.300 கோடி என்கிறார்கள். அங்கு குதிரை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்காக, குதிரை பந்தய பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்குவதற்கும் தாசில்தார் அஜித்குமார் ராய் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தாராம். மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை அவர் வாங்கியதும் தெரியவந்தது.
தனது பெயரிலும், தன்னுடைய மனைவி பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் சொத்துகள் வாங்கி குவித்து இருக்கிறார். அதற்கான ஆவணங்கள் போலீசாரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 10.30 மணி வரை 30 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானது.இதை தொடர்ந்து நேற்று தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.
மேலும் கைதான தாசில்தார் அஜித்குமார் ராயை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது இந்த சொத்துகளை வாங்கியது எப்படி?, அதற்கான வருவாய் ஆதாரங்களை அளிக்கும்படியும் தாசில்தாருக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். வருமானத்திற்கு அதிகமாக ஆயிரம் கோடி அளவிற்கு சட்டவிரோதமாக சொத்து குவித்த தாசில்தார் கைதாகி இருக்கும் சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications