தேன்கனிக்கோட்டை காட்டில் கிடந்த உடல்.. பெங்களூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கதி
பெங்களூர்: பெங்களூரில் ஒன்றாக ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் கோபால் (வயது 41). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். நேற்று முன்தினம் கோபால் தனது காரில் ஆனேக்கல் அருகே கர்ப்பூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்தது. திடீரென்று கோபாலின் காரை பின்பக்கத்தில் இருந்து மோதியது. பிறகு காரை பின்தொடர்ந்து சென்றது. இதனால் பயந்துபோன கோபால் காரை நிறுத்தினார்.
காரில் கடத்தல்
இதையடுத்து கண்இமைக்கும் நொடியில் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கோபாலை அவரது காரில் இருந்து தங்களின் காரில் ஏற்றி கடத்தியது. இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் ஆனேக்கல் போலீசில் புகார் செய்தனர். கோபாலை மீட்டு தர வேண்டும். அவரை கடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர், உறவினர்கள் ஆனேக்கல் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கோபாலை மீட்பதாக கூறினர். ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தான் கோபால் தமிழ்நாட்டின் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இறந்து கிடப்பது நேற்று போலீசாருக்கு தெரியவந்தது. கூரிய ஆயுதத்தால் அவர் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றினர்.
3 பேர் கைது
இதையடுத்து கடத்தல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் மோகன் பாபு உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகன் பாபு ரூ.25 லட்சத்தை வழங்கி கோபாலை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏவியதும். கூலிப்படையினர் கோபாலை கடத்தி கொன்றதும் தெரியவந்துள்ளது.
பிரிந்ததால் தீர்த்து கட்டிய நபர்
இதுபற்றி போலீசார் கூறுகையில், ''மோகன் பாபுவும், கொலையான கோபாலும் நண்பர்கள். இருவர்கள் 2 பேரும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இதனால் கோபமடைந்த மோகன் பாபு, கோபாலை தீர்த்து கட்ட திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications