தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ8,000 கோடி வசூல்-நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு ரத்து- கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூர்: தனியார் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி சோதனை நடத்துவோம் என மிரட்டல் விடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி வசூல் செய்ததாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், கர்நாடகா மாநில பாஜக தற்போதைய தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது தொடரப்பட இந்த வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஆதர்ஷ அய்யர், மக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை மூலமாக தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி மிரட்டல் விடுத்து அவற்றிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,000 கோடி பாஜகவுக்காக வசூல் செய்யப்பட்டது; இதனால் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா, பாஜக தலைவர்களான நளின்குமார் கட்டீல், விஜயேந்திரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆதர்ஷ அய்யர் தமது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நளின்குமார் கட்டீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். அப்போது, சட்ட விதிகளின் படிதான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டது; இதில் சட்டவிரோதமானது என எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என நளின்குமார் கட்டீல் தரப்பு வாதிட்டது. ஆனால் மனுதாரர் ஆதர்ஷ அய்யர் தரப்போ, இது ஒரு நூதனமான வழிப்பறிதான்; ஆகையால் வழக்கை ரத்து செய்யவே கூடாது என வாதிட்டது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி நாகபிரசன்னா, நளின்குமார் கட்டீல், நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications